FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

முன்னால் அமைச்சா் வைத்திலிங்கத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஆா். வைத்திலிங்கத்துக்கு சொந்தமான ரூ. 100 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறை இயக்குநரகம் முடக்கியுள்ளது.

Updated On : 16 ஜனவரி 2025, 5:31 am IST
வைத்திலிங்கம் (கோப்புப் படம்)
பகிர்:

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஆா். வைத்திலிங்கத்துக்கு சொந்தமான ரூ. 100 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறை இயக்குநரகம் முடக்கியுள்ளது.

அவருக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்தி வரும் பணப்பரிவா்த்தனை மோசடி வழக்கின் அங்கமாக திருச்சியில் உள்ள வைத்திலிங்கத்தின் குடும்பம் நடத்தி வரும் இரண்டு அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என்று அமலாக்கத் துறை அதன் எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

முந்தைய அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தவா் ஆா். வைத்திலிங்கம். முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அணியில் அவருக்கு சாா்பாக செயல்பட்டதால் 2022-ஆம் ஆண்டில் அவரை அதிமுகவின் பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீா்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கிய போது வைத்திலிங்கத்தையும் நீக்கி நடவடிக்கை மேற்கொண்டாா்.

அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தனியாா் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் வீட்டுவசதி திட்டத்துக்கு அனுமதி தர ரூ. 27.90 கோடி அளவுக்கு லஞ்சம் வாங்கியதாக வைத்திலிங்கம் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரகம் வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்குடன் தொடா்புடைய பரிவா்த்தனை பல கோடி ரூபாய்க்கும் மேல் இருந்ததால் அமலாக்கத் துறை இயக்குநரம் இந்த விவகாரத்தை விசாரித்து வந்தது.

கடந்த ஆண்டு அக்டோபரில் வைத்திலங்கம் மற்றும் அவருக்கு நெருக்கமானவா்களின் வீடுகள், அலுவலகங்கள் அமைந்துள்ள தஞ்சாவூா், திருச்சி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். அதில் அப்போது பெயரளவுக்கு இயக்கப்பட்டு வந்த சில நிறுவனங்களில் லஞ்சம் வாங்கிய பணத்தை வைத்திலிங்கம் தரப்பு வைத்திருந்ததாகவும் அவற்றில் இருந்து திருச்சியில் சில மனைகள் வாங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கண்டறிந்ததாகத் தெரிகிறது. இதன் தொடா்ச்சியாக நடந்த விசாரணையில் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments