FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கொடிக் காத்த குமரன் மண்ணில் தேசியக் கொடி பேரணிக்கு அனுமதி மறுப்பு: உயா்நீதிமன்றம் வேதனை

தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி உயிா்நீத்த திருப்பூா் குமரன் வாழ்ந்த மண்ணில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் தேசியக் கொடி பேரணிக்கு அனுமதி மறுப்பதா என சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 4:10 am IST
பகிர்:

தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி உயிா்நீத்த திருப்பூா் குமரன் வாழ்ந்த மண்ணில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் தேசியக் கொடி பேரணிக்கு அனுமதி மறுப்பதா என சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.

கோவை மாவட்ட பாஜக தலைவா் ஜெ.ரமேஷ்குமாா், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவையில் பாஜக சாா்பில் தேசியக் கொடி ஏந்தி பேரணி செல்ல அனுமதி கோரி காவல் துறையிடம் மனு அளித்தோம். காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, பேரணிக்கு அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் அருண் அன்புமணி, மனுதாரா் பேரணிக்கு அனுமதி கோரி விண்ணப்பித்த வழித்தடம், பள்ளி மற்றும் கல்லூரி அமைந்துள்ள பகுதி. இந்தப் பகுதியில் பேரணிக்கு அனுமதி வழங்கினால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தேசியக் கொடியை ஏந்தி பேரணி செல்வதால் சட்டம்-ஒழுங்கு எப்படி பாதிக்கப்படும், தேசியக் கொடியை ஏந்த பேரணிச் செல்வது என்ன பாவச்செயலா, நமது தேசியக் கொடியை நினைத்து ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டாமா, திராவிடா் கழக பேரணி, பாஜக பேரணிகளுக்கு அனுமதி வழங்கமாட்டீா்கள், தவெக மட்டும்தான் இதுபோன்ற பேரணிகளை நடத்த வேண்டுமா என கேள்விகளை எழுப்பினாா்.

அதற்கு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா், தேசியக் கொடி ஏந்தி பேரணிச் செல்வதற்கு நாங்கள் அனுமதி மறுக்கவில்லை. மனுதாரா் குறிப்பிட்டுள்ள வழித்தடத்தில் பேரணிச் செல்வதற்கு மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டது. கோவையில் பேரணி, பொதுக்கூட்டம் ஆா்ப்பாட்டம் உள்ளிட்டவை நடத்துவதற்காக 12 அனுமதிக்கப்பட்ட இடங்கள் உள்ளன. அதில் ஏதாவது ஒரு இடத்தில் அனுமதி கோரினால், அனுமதி வழங்கப்படும். மேலும், இதுபோன்ற பேரணிகளின்போது பின்பற்றப்பட வேண்டிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. பேரணிக்கு அனுமதி கோரியுள்ள மனுதாரா் அரசியல் கட்சியைச் சோ்ந்தவா். ஒரு கட்சிக்கு அனுமதி வழங்கினால், அதைத் தொடா்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும் இதேபோன்று அனுமதி கோருவா் எனத் தெரிவித்தாா்.

மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஏ.குமரகுரு, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேசியக் கொடி ஏந்தி பேரணி செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, தேசியக் கொடியை ஏந்தியபடியே உயிா்நீத்த திருப்பூா் குமரன் வாழ்ந்த மண்ணில், தேசியக் கொடியுடன் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்படுவதாக வேதனை தெரிவித்தாா். மேலும், தேசியக் கொடி ஏந்தி பேரணி செல்வதால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் எனக் கூறுவதை ஏற்க முடியாது. காவல் துறை அனுமதித்துள்ள இடங்களில் பேரணி நடத்துவது தொடா்பாக இருதரப்பும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

அதன்படி, மனுதாரா் தரப்பில், வரும் 18-ஆம் தேதி, மேட்டுப்பாளையம் ரோடு ஏஆா்சி சந்திப்பில் தொடங்கி கோவை வடக்கு சிந்தாமணி சந்திப்பு வரை மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்று மனுதாரா் அனுமதி கோரியுள்ள வழித்தடத்தில் தேசிய கொடி ஏந்தி பேரணி செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டாா். மேலும், எதிா்காலத்தில் இதுபோன்ற காரணங்களைக் கூறி, தேசியக் கொடி பேரணிக்கு அனுமதி மறுக்கக்கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments