தவெக வெற்றி பெறுமா? அதிமுக முன்னாள் அமைச்சர் பதில்
தேர்தலில் வெற்றி பெறும் அளவுக்கு தவெக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறும் அளவுக்கு தவெக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது, "தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என்ற பெயரில், கருத்தைத் திணித்திருக்கின்றனர், ஆளுங்கட்சியினர். அவற்றையெல்லாம் பொய்யாக்கி அதிமுக அமோக வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்பார்.
தவெக, இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மைதான். ஆனால், தேர்தலில் வெற்றிபெறும் அளவுக்கு தாக்கத்தை தவெக ஏற்படுத்தவில்லை. ஆகையால், அதிமுகதான் வெற்றி பெறும். திமுக அதற்கடுத்த இடத்தில் வரும்.
Advertisement
2016 தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஜெயலலிதா போட்டியிட்ட நேரத்தில், ஒருவரைத் தவிர மற்ற அனைத்து கருத்துக் கணிப்புகளும் திமுகதான் வெற்றி பெறும் என்று கூறினர்.
ஆனால், நடந்தது என்ன? அதிமுக 135 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. ஆகவே, வடநாட்டிலிருந்தும் எங்கேயோ இருப்பவர்கள் எடுக்கும் கருத்துக் கணிப்புகளெல்லாம் தவறானது. வாக்களித்த அனைவரையும் அவர்கள் கேட்டனரா?
கருத்துக் கணிப்புகளை ஊடகங்களின் தீனி என்றுதான் பார்க்க வேண்டுமேதவிர, அது மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்காது. மாற்றம் என்பது மக்களிடையே உருவாகியுள்ளது" என்று தெரிவித்தார்.