குதிரை பேரம்: விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்! திமுக எம்.பி. வில்சன்
எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்வது பற்றி திமுக எம்.பி. வில்சன் பதிவு...
சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜிநாமா செய்வது வாக்காளர்களுக்கு செய்யும் துரோகம் என்றும் குதிரை பேரம் பற்றிய விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும் திமுக எம்.பி. வில்சன் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"தேர்தல் முடிவுகள் வெளியான சில நாள்களுக்குள் ஒரு கட்சியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெருமளவில் ராஜிநாமா செய்வதும், அதைத் தொடர்ந்து தனிப்பட்ட ஆதாயத்திற்காக உடனடியாகக் கட்சி மாறுவதும், வாக்காளர்களுக்கும் அவர்களின் ஆணைக்கும் செய்யப்படும் துரோகமாகும்.
Advertisement
Advertisement
இவை நாடாளுமன்ற ஜனநாயகத்தின் துஷ்பிரயோகத்தின் தெளிவான அறிகுறிகளாகும். மேலும் பொதுமக்களிடையே ஊழல் மற்றும் தொடர்ச்சியான குதிரை பேரங்கள் குறித்த சந்தேகங்களை எழுப்புகின்றன.
லஞ்சக் குற்றங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் குற்றவியல் வழக்குகளிலிருந்து விலக்கு பெற முடியாது என்று உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பளித்தது.
ஆளுநர், தேர்தலுக்குப் பிந்தைய நிகழ்வுகள் முதல் இதுவரையிலான அரசியல் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்து, மக்களின் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் வகையில், குதிரை பேரங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒரு பாரபட்சமற்ற, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
தங்கள் பதவியை ராஜிநாமா செய்யும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது பேரவை உறுப்பினரோ, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இடைத்தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று சட்டத்தைத் திருத்துவது குறித்து நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டும்.
இதன்மூலம் கூட்டணிகளை மாற்றுவது, காலியிடங்களை உருவாக்குவது போன்றவற்றைத் தவிர்க்கலாம்" என்று பதிவிட்டுள்ளார்.
அதிமுகவைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.