ரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!
லண்டனில் ரூ.11,000 கோடியில் முதலீட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து...
லண்டனின் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.11,000 கோடி முதலீடு செய்ய, முதல்வர் விஜய் முன்னிலையில் திங்கள்கிழமை (செப். 14) ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் விஜய் வியாழக்கிழமை (செப்.10) இரவு 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
அங்கு, நடிகர் அஜித் குமார் பங்கேற்ற ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’ எனும் கார் பந்தயத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் விஜய் பார்வையாளராகவும் போட்டியைக் கண்டு களித்தார்.
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து, முதல் கட்டமாக தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பது குறித்து தொழிலதிபர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் விஜய் ரூ.11,000 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் விஜய் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
பிரிட்டன், லண்டன் நகரில் இன்று (செப். 14), சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் குழுமத்தின் உலகளாவிய சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் பாரி பெயிண்டர் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. ஆகியோர் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், பிரிட்டன் நாட்டிற்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி IFS, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர் என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் அரசு முறைப்பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
An agreement was signed on Monday (Sept. 14) in the presence of Chief Minister Vijay for London-based Samvardhana Motherson International to invest ₹11,000 crore in Tamil Nadu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.