ஈரானுடன் அமைதிப்பேச்சு! பாக். புறப்பட்டார் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்!
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பாகிஸ்தான் செல்வது குறித்து...
பாகிஸ்தான் தலைமையில் நடைபெறும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இஸ்லாமாபாத் புறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஈரானின் அணுசக்தித் திட்டத்துக்கு எதிராக, அந்நாட்டின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து கடந்த பிப். 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் கூட்டுத் தாக்குதல் நடத்தின. இதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் அமைந்திருந்த முக்கிய கட்டமைப்புகளின் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன.
இதனைத் தொடர்ந்து, சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானிய படைகள் முடக்கியதால், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென சர்வதேச அளவில் அழுத்தம் அதிகமானது. இதனால், இருதரப்புக்கும் இடையில் 2 வாரங்களுக்கு போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக, கடந்த ஏப்.7 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
Advertisement
இத்துடன், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையில் போர்நிறுத்தம் கொண்டுவர மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் அரசு முன்வந்தது. இதையடுத்து, பாகிஸ்தானின் அழைப்பை இருதரப்பும் ஏற்றுக்கொண்டன.
இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் தலைமையில், இஸ்லாமாபாதில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினர் வெள்ளிக்கிழமை (ஏப். 10) அன்று பாகிஸ்தான் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில், டிரம்ப் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரியும், அவரின் மருமகனுமான ஜராட் குஷ்னர் மற்றும் சிறப்பு பிரதிநிதி ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட 10 அம்சத் திட்டத்தை அந்நாட்டு அரசு முன்வைக்கவுள்ளது.
முன்னதாக, இஸ்லாமாபாதில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வின் காரணமாக 2 நாள்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.