அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு தர வேண்டாம்! பிரிட்டன் அரசுக்கு ஈரான் எச்சரிக்கை!
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஒத்துழைக்க வேண்டாமென பிரிட்டன் அரசுக்கு அமைச்சர் அராக்சி எச்சரிக்கை...
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு ராணுவ ஒத்துழைப்பு அளிக்க வேண்டாம் என பிரிட்டன் அரசுக்கு ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் மீதான போரில், அமெரிக்க படைகள் பிரிட்டனின் ராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதற்கு பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் கடந்த ஜூலை மாதம் ஒப்புதல் அளித்தார். முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கொண்டு வந்த கொள்கையின் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், பிரிட்டனின் வெளியுறவுச் செயலர் எட் மிலிபேண்ட் உடன் அமைச்சர் அராக்ச்சி செல்போன் வாயிலாக உரையாடியுள்ளார். அப்போது, ராணுவ ஒப்பந்தங்களைக் காரணமாகக் கூறி வன்முறையாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதை ஏற்க முடியாது என அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, ஈரானின் புரட்சிகர காவல் படையினரை தேசிய அச்சுறுத்தலாகப் பிரிட்டன் அரசு பட்டியலிட்டதை முறையற்றது என அமைச்சர் அராக்ச்சி விமர்சித்துள்ளார். மேலும், ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் 2 போர்களிலும் பிரிட்டன் அரசு கூட்டுச் சதி செய்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இத்துடன், சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் ஒரு நாட்டின் மீதான சட்டவிரோத தாக்குதலுக்கு மற்றொரு நாடு அதன் நிலப்பரப்பு மற்றும் கட்டமைப்புகளைப் பயன்படுத்த அனுமதியளிப்பது வன்முறையகக் கருதப்படும் எனவும், இந்த நடவடிக்கைகள் தாக்கப்பட்ட நாட்டிற்கு தற்காப்பு உரிமையை வழங்குவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து, ஈரானுக்கு எதிரான போரில் பிரிட்டன் ஈடுபடவில்லை எனக் கூறிய மிலிபேண்ட் தங்கள் நாடு மோதல்களை ராஜதந்திர ரீதியாக முடிவுக்குக் கொண்டுவரவே என்றும் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்ததைத் தொடர்ந்து, இருதரப்பும் மீண்டும் போரில் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Iranian Foreign Minister Seyed Abbas Araghchi has warned the British government against providing military cooperation for a US attack.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.