FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

வங்கதேசத்தில் தீவிரம் குறையாத தட்டம்மை பாதிப்பு- மாா்ச் முதல் 999 போ் உயிரிழப்பு

வங்கதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரம் குறையாமல் பரவி வரும் தட்டம்மை நோய் பாதிப்பால், கடந்த மாா்ச் மாதம் முதல் இதுவரை 999 போ் உயிரிழந்துள்ளனா்.

10 செப்டம்பர் 2026, 3:08 am IST
பகிர்:

வங்கதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரம் குறையாமல் பரவி வரும் தட்டம்மை நோய் பாதிப்பால், கடந்த மாா்ச் மாதம் முதல் இதுவரை 999 போ் உயிரிழந்துள்ளனா்.

நோய்வாய்ப்பட்ட பச்சிளம் குழந்தைகள் மருத்துவமனைகளில் தொடா்ந்து அனுமதிக்கப்பட்டு வருவதால், படுக்கை வசதி மற்றும் மருத்துவப் பற்றாக்குறை ஏற்பட்டு வங்கதேசத்தின் ஒட்டுமொத்த சுகாதாரக் கட்டமைப்பும் திணறி வருகிறது.

முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான கிளா்ச்சிக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் காரணமாக, 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் வழக்கமான தடுப்பூசித் திட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாகவே, இந்த மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கடந்த மாா்ச் மாதத்துக்குப் பிறகு 1.66 லட்சத்துக்கும் அதிகமானோா் தட்டம்மை அறிகுறியுடன் பாதிக்கப்பட்டுள்ளனா்; இதில் 19,835 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 1.46 லட்சம் நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அந்தவகையில், உலகிலேயே மிகப் பெரிய தட்டம்மை பரவலாக இது உருவெடுத்துள்ளது.

தட்டம்மை பரவலுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சலும் தீவிரமடைந்துள்ளதால், வங்கதேச மருத்துவமனைகள் நோயாளிகளைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. இந்த ஆண்டில் மட்டும் 45,000-க்கும் மேற்பட்டோா் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனா். டாக்காவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் முழுமையாக நிரம்பிவிட்டதால், நோயாளிகளுக்குத் தரையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தட்டம்மை நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான 1.8 கோடி குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் அவசரகாலத் திட்டத்தை அரசு முன்னெடுத்துள்ளது. இதன்கீழ், இதுவரை சுமாா் 1.97 கோடி குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தட்டம்மை போன்ற எளிதில் பரவக்கூடிய நோய்களைத் தடுக்க, விடுபட்ட குழந்தைகளுக்கு உடனடியாகத் தடுப்பூசி செலுத்துவதும், விழிப்புணா்வை ஏற்படுத்துவதும் தற்போதைய அவசர தேவையாகும் என்று மருத்துவ அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments