வெளிநாட்டவர் ஏலியன்களா? சீக்கியர்களுக்கு எதிராக அமெரிக்கா வெளியிட்ட சர்ச்சைப் பதிவு!
மிஸ்டர் சிங் எங்கள் சாலைகளை விட்டு விலகுங்கள் என அமெரிக்க அரசு வெளியிட்ட பதிவால் சர்ச்சை...
அமெரிக்காவில் விபத்து வழக்குகளில் கைதான வெளிநாட்டவரை வேற்றுகிரகவாசிகள் (ஏலியன்கள்) என சித்தரித்து அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புப் படை செய்யறிவு (ஏஐ) பதிவுகளை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு அமைந்தது முதல் அந்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால், இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் இனவெறித் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அமெரிக்காவில் விபத்து மற்றும் குற்றவழக்குகளில் கைதான சீக்கியர்கள் உள்ளிட்டோரின் புகைப்படங்களைப் பயன்படுத்தி அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு துறை செய்யறிவு விடியோ மற்றும் போஸ்டர்களை வெளியிட்டு புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இதையடுத்து, பிரபல டிரான்ஸ்ஃபார்மர்ஸ் திரைப்படத்தின் காட்சிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள விடியோக்களில் வெளிநாட்டவர் உலகத்திற்குள் ஊடுறுவும் ஏலியன்களாகவும், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் உலகைப் பாதுகாக்கும் நாயகர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் விபத்து ஏற்படுத்தியதாகக் கைது செய்யப்பட்ட ஹர்ஜிந்தர் சிங், ராஜிந்தர் குமார், ஜஸ்வீர் சிங் உள்ளிட்ட இந்தியர்கள் மற்றும் பெக்ஸான் பெய்ஷிகீவ், அக்ரோர் பொஸோரோவ் உள்ளிட்ட வெளிநாட்டவர்களின் பெயர்களும் அந்த விடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்ற, மற்றொரு பதிவில் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புப் படை தங்களை டிரான்ஸ்ஃபார்மர் கதாபாத்திரமாகச் சித்தரித்து சீக்கியர்களுக்கு எதிராக செய்யறிவு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
அதில், “எங்களின் சாலைகளை விட்டு விலகுங்கள் உங்களுக்கு எப்படி வாகனம் ஓட்ட வேண்டும் எனத் தெரியாது மிஸ்டர் சிங்” எனும் வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. இதுபோன்ற பதிவுகளை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து வெளியிட்டு வருவது அமெரிக்காவில் வசிக்கும் இந்திய சமூகத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அரசின் இந்தப் பதிவுகள் இனவெறியைத் தூண்டும் விதத்தில் இருப்பதாகவும், இந்தியர்களுக்கு எதிரான வன்முறைகளை உருவாக்கக் கூடும் எனவும் கூறி ஏராளமான இந்திய மற்றும் சீக்கிய அமைப்புகள் அதற்குக் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
US Homeland Security has released AI images depicting foreign nationals arrested in accident cases as aliens.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.