தில்லி தேர்தல்: 5 முக்கிய வாக்குறுதிகளுடன் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று (ஜன. 29) வெளியிடப்பட்டுள்ளது. இது 5 முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏழைப் பெண்கள் பயன்பெறும் வகையில் மாதம் ரூ. 2500 வழங்கப்படும், ரூ. 25 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு, வேலையில்லா பட்டதாரிகள் பயன்பெறும் வகையில் துறை சார்ந்த பயிற்சியுடன் கூடிய ஊக்கத்தொகை - மாதம் ரூ. 8,500, தகுதியுடைய வீடுகளுக்கு 300 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம், இலவச ரேஷன் பொருள்களுடன் ரூ. 500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் சில வாக்குறுதிகள் (காங்கிரஸ் ஆளும்) ராஜஸ்தான், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வெற்றிகரமாக காங்கிரஸால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
இதோடு மட்டுமின்றி அரசு வேலைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியம் மற்றும் விதவைப் பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ. 5000 ஆக உயர்த்தப்படும் என்பன போன்ற வாக்குறுதிகளையும் அளித்துள்ளனர்.
பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவரும் நிலையில், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் சமூக நலத் திட்டங்களை உள்ளடக்கியுள்ளதாக காங்கிரஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ்,
''உத்தரவாதம் என்பது தில்லி மக்களின் உரிமை. காங்கிரஸ் கட்சி 5 முக்கிய உத்தரவாதங்களை அளித்துள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. தில்லியில் வியாபாரம் சுமூகமாக நடப்பதை விட, மூச்சுவிடுவது சுமூகமாக உள்ளதா? என்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும்'' எனக் குறிப்பிட்டார்.
தில்லியில் பிப்ரவரி 5ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | மகா கும்பமேளா: மௌனி அமாவாசை நாளில் 5.7 கோடி பேர் புனித நீராடல்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.