இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ!
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தியா வருவது குறித்து...
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வரும் மே மாதம் இந்தியா வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அரசு முறைப் பயணமாக வியாழக்கிழமை (ஏப். 9) அன்று அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். அவரின் இந்த 3 நாள் பயணத்தின் முதல் நாளில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அதிகாரிகளை அவர் நேரில் சந்தித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, விக்ரம் மிஸ்ரி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்து உரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பில், வர்த்தகம், தாதுக்கள், பாதுகாப்பு ஆகிய துறைகளில் இருநாடுகள் இடையிலான உறவுகள் குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
Advertisement
இந்தச் சந்திப்பில் இடம்பெற்ற இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செரிஜியோ கோர், அமைச்சர் ரூபியோ வரும் மே மாதம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வார் என தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இருப்பினும், இதுகுறித்த முழுமையான தகவல் வெளியிடப்படவில்லை.
ஏற்கெனவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2026 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வேன் என அறிவித்துள்ளார். இதையடுத்து, அமைச்சர் ரூபியோவின் இந்திய பயணம் டிரம்ப்பின் பயணத்துக்கான முன்னேற்பாடாக இருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.
முன்னதாக, ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.