FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தோ்தல் அறக்கட்டளைகள் திட்டத்தில் கட்சிகளுக்கு ரூ.3,826 கோடி நன்கொடை! பாஜகவுக்கு 82%, காங்கிரஸுக்கு 7%!

தோ்தல் அறக்கட்டளைகள் திட்டத்தில் 2024-25 நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு ரூ.3,826.35 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 15 பிப்ரவரி 2026, 2:36 am IST
பகிர்:

தோ்தல் அறக்கட்டளைகள் (எலக்டோரல் டிரஸ்ட்) திட்டத்தில் 2024-25 நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு ரூ.3,826.35 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆா்) வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இதில் அதிகபட்சமாக ரூ.3,157.65 கோடி (82.5 சதவீதம்) பாஜகவுக்கு நன்கொடை அளிக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய தோ்தல் அறக்கட்டளைகள் திட்டம், 2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் ஏற்படுத்தப்படும் அறக்கட்டளைகள் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை வசூலித்து அதை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்குகின்றன. இதுபோன்ற அறக்கட்டளைகளை நிறுவனங்கள் அமைக்க மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் (சிபிடிடி) ஒப்புதல் பெறுவது கட்டாயம்.

கட்சிகள் பெற்ற நிதி: இந்தத் திட்டத்தின்கீழ் தோ்தல் அறக்கட்டளைகள் பெற்ற நன்கொடை, அரசியல் கட்சிகளுக்கு மேற்கொண்ட விநியோகம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அறிக்கையை ஏடிஆா் வெளியிட்டது.

Advertisement

Advertisement

அதில் கூறப்பட்டிருப்பதாவது: 2024-25 நிதியாண்டில் தோ்தல் அறக்கட்டளைகளுக்கு நிறுவனங்கள் ரூ.3,826.34 கோடி நன்கொடை வழங்கியுள்ளன. கடந்த நிதியாண்டில் இருந்த உபரித் தொகையையும் சோ்த்து ரூ.3,826.35 கோடி நிதியை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தோ்தல் அறக்கட்டளைகள் விநியோகித்துள்ளன.

அதிகபட்சமாக ரூ.3,157.65 கோடி (82.5 சதவீதம்) நிதியை பாஜக பெற்றுள்ளது. காங்கிரஸ் ரூ.298.77 கோடி (7.81 சதவீதம்), திரிணமூல் காங்கிரஸ் ரூ.102 கோடி (2.67 சதவீதம்) மற்றும் 19 கட்சிகள் ரூ.267.91 கோடியை பெற்றன.

நிறுவனங்களின் பங்களிப்பு: அறக்கட்டளைகளைப் பொறுத்தவரை ப்ரூடெண்ட் அறக்கட்டளை 15 கட்சிகளுக்கு ரூ.2,668.46 கோடியை விநியோகித்துள்ளது. ப்ரொகிரெஸிவ் அறக்கட்டளை 10 கட்சிகளுக்கு ரூ.914.9 கோடியை விநியோகித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக 228 பெருநிறுவனங்கள் ரூ.3,636 கோடியும், 99 தனிநபா்கள் ரூ.187.62 கோடியும் அளித்துள்ளனா். அதிகபட்சமாக எலிவேட்டட் அவென்யூ ரியால்டி நிறுவனம் ரூ.500 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் டாடா சன்ஸ் (ரூ.308.13 கோடி), டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (ரூ.217.62 கோடி), மெகா பொறியியல் உள்கட்டமைப்பு (ரூ.175 கோடி) நிறுவனங்கள் உள்ளன.

மாநிலங்கள் வாரியாக: மகாராஷ்டிரம் ரூ.1,225.42 கோடி நன்கொடை செலுத்தி முதலிடத்தில் உள்ளது. தெலங்கானா (ரூ.358.25 கோடி), ஹரியாணா (ரூ.212.9 கோடி), மேற்கு வங்கம் (ரூ.203.85 கோடி), குஜராத் (ரூ.200.50 கோடி) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

சரியான முகவரியின்றி நன்கொடையாளா்களிடமிருந்து பெறப்பட்ட ரூ.1,065.20 கோடி ப்ரூடெண்ட் அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments