FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மனிதம் வளர்க்கும் ‘முல்லை வனம்’ பற்றித் தெரிந்து கொள்வோமா!

சென்னையை உலுக்கிய வர்தா புயலுக்குப் பின், இவர் சென்னை சென்று சுமார் 500 மரங்களை உயிர்ப்பித்து வந்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்,

Updated On : 9 மே 2019, 1:08 pm IST
பகிர்:

முல்லைவனம்!

மரம் நட்டு மனிதம் வளர்க்கும் மாமனிதர் தான் முல்லைவனம். பெயருக்கேற்றார்  போல், அன்பை தன்னுள்ளே இதய வனத்தில் புதைத்து வைத்திருக்கிறார். இவரைப் போன்ற நல்லுள்ளங்களின் சேவை தான், இன்றைய கால கட்டத்தின் தேவை. இவர் மரங்கள் நட்டு பாதுகாப்பது மழைக்காக மட்டும் அன்று. மரங்களையும் அவர் தமது சக உயிர்களில் ஒன்றாகவே கருதுகின்றார். அவருக்கு மரங்களின் மீது அப்படியொரு தீராக்காதல்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், இன்னும் ஒரு 50 ஆண்டுகள் கழித்து, விதியிருந்தால் நாமும், வெகு நிச்சயமாக நம் சந்ததியினரும் என்ன சாப்பிடுவார்கள்? இப்போது நமக்கு கிடைக்கும் காற்றாவது அவர்களுக்கு கிடைக்குமா? நீர்நிலைகளின் கதி என்ன? பாக்கெட்டுகளில் விற்கப்படும் நீர், இனிவரும் காலத்தில் சிறு குப்பிகளில் கிடைக்குமா? மை உறிஞ்சும் ஃபில்லர்களில் சொட்டு சொட்டாய் நீர் உறிஞ்சுவார்களோ? நெஞ்சம் பதைபதைக்கின்றது.

Advertisement

Advertisement

வருங்காலத்தில் எல்லாமும் மாறிப்போகும். இப்போது நாம் அனுபவித்து  வரும் சூழியலை கொஞ்சம் மேம்படுத்த, ஓராயிரம் முல்லைவனம் போன்ற நல்உள்ளங்கள் தேவை. இந்த பதிவை படிக்கும் ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் குறைந்தது 5 மரங்களையாவது நட்டு பராமரிக்க வேண்டும்.

மரங்களுக்கும் நம்மைப் போல உயிருண்டு. அருகில் சென்று தொட்டுப் பாருங்கள். அவை நம்முடன் பேசும். பசுமை மூலம் நமக்கு உயிர்த்தலை தருகின்றது. மண்ணை மெருகேற்றுகின்றது, நீரை வளமாக்குகின்றது. சூழலியலை சமன்படுத்துகின்றது. ஓராயிரம் உயிர்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றது. ஆகவே, பொது நலம் போதிக்கும் கடவுளாய் நாம் மரங்களைப் பார்க்க வேண்டும். மரம் வளரும் போது வேர் விட்டு பரப்புதலை பார்க்கும் போது, மனிதனும் குடும்பத்தை கிளைகளாக பரப்ப வேண்டும் எனும் தத்துவத்தை அது போதிப்பதை நாம் உணர வேண்டும்.

மரங்கள் வாழ்வியலைப் போதிக்கும் ஆசான்கள். இறைமையை போதிக்கும் இறைவன், அறம் போற்றும் ஆண்டவன்.தல விருட்சங்கள் என்று ஆன்மிகத்திலும் அறம் வைத்தார்கள் நம் சித்தர்கள்.

நன்றாய் சிந்தித்து பாருங்கள். வேப்பமர சூழலில் வளர்ந்த நாம் இன்று வேப்பங்குச்சியை இணைய வணிகத்தில் வாங்கும் கொடூர நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கின்றோம். இதை பெருமையாய் வேறு பேசிக் கொள்கின்றோம். காலம் கடந்து விடவில்லை. இனியேனும் சற்று விழித்து, நம் கண் முன்னே உள்ள மரங்களைப் பாதுகாப்போம். அண்மையில் facebookல் பார்த்த செய்தியை, அவரின் அனுமதியோடு இங்கே பகிர்கின்றோம்.

நாங்கள் சிறு வயதாக இருக்கும் போது எங்கள் ஊரில் வீட்டிற்கொரு தென்னை மரம் இருக்கும். எங்கள் வீட்டருகே இருக்கும் மலையின் உச்சியிலிருந்து பார்த்தால் செங்கல்பட்டு முழுவதும் தென்னந்தோப்பு போல் ஒரு காட்சிப்பிழை தோன்றும். அதனிடையே எங்கள் வீடுகளை தேடுவதே ஒரு தனி இன்பம்.

அப்போது எல்லா வீட்டிலும் இளநீர், கீற்றுகளை வெட்ட பக்கத்து சிற்றூர்களிலிருந்து மரமேறிகள் வருவார்கள். அவர்கள் உழவர்களாக இருந்தவர்கள். நன்றாக இளநீர் குடிப்போம், தாத்தா கீற்றுகளை வேய்ந்து வாசலுக்கு தட்டி செய்வார். குச்சிகளை துடைப்பமாக்குவார். மரமேறி எங்கள் குடும்பத்தில் ஒருவராக கருதப்படுவார். அவர் வீட்டு நல்லது கெட்டதுகளில் நாங்களும், எங்களுக்கு அவர்களும் வருவார்கள்.

வெட்டிப் போட்ட தென்னை கீற்றுகள் மலை போல் குவிந்து கிடக்க படுத்து உருளுவோம் நண்பர்களோடு, நல்ல குளுமையாக இருக்கும். ஓலை மீது உட்கார்ந்து ஒருவன் இழுத்துச் செல்ல வண்டி போல் பயன்படுத்துவோம்.  தாத்தா பார்த்தால் பேயாட்டம் தான், தடி எடுத்து துரத்துவார். பாட்டி எங்களுக்கு வக்காலத்து வாங்கும் :) வாழ்வின் பெரு வசந்த காலங்கள் அவை.

காலம் செல்ல செல்ல சில வீடுகளில் தென்னைகளும் இன்ன பிற மரங்களும் காணாமல் போயின. வீடு கட்ட வேண்டுமே. அதன் பிறகு எப்போதாவது மரமேறுபவர்களைப் பார்ப்பேன். வீடு கட்டுவதற்காக மரங்களை வெட்ட அவர்கள் வந்த போது தான்.

இப்போதும் ஒரு 60% வீடுகளில் தென்னை மரங்கள் உள்ளன. ஆனால் அவைகள் அப்படியே இருக்கின்றன எவ்வளவு காற்று மழை வந்தாலும். அந்த வீட்டு மாந்தர்கள் மட்டும் மாறிவிட்டார்கள் நவீன நுகர்வு  குழுமத்தினராக.  தேங்காய் தரையில் விழுந்தால் கூட எடுப்பாரில்லை.  என் போல் கூச்சமில்லாதவர்கள் கண்ணில் பட்டால் மட்டும் எடுப்பார்கள்.

தன்னிறைவாக வாழ்ந்த ஒரு இனம் நுகர்வின் அடிமையாய் மாறிய கதையிது.

பளபளக்கும் தரைக்கு அடியில் எங்கள் வீட்டுத் தென்னையின் வேர்கள் மரித்துக் கிடக்கின்றன. கூடவே தாத்தன் பாட்டியின், எங்கள் சிறுபருவ நினைவுகளும்.

தினேசு
10-08-17

இதுபோல் எத்துணை, எத்துணை வாழ்வின் நிகழ்வுகளை/ நிதர்சனங்களை  இழந்திருக்கிறோம் என்று தெரியவில்லை.

மரங்கள் பற்றி போதும். இனி மனிதம் வளர்க்கும் முல்லைவனம் பற்றி அறிவோம். இவரின் நோக்கம் மரங்களைக் காப்பதே. இவர் பாரம்பரியமான மரம் வளர்க்கும் முறைகள் பற்றி விளக்குகின்றார்.
 
மரங்களுக்காக தம் வாழ்வை அர்ப்பணித்த மனிதர் இவர். நாளொரு மேனியும்,பொழுதொரு வண்ணமுமாக இவரின் சேவைகள் மிளிர்ந்து வருகின்றது. சென்னையை உலுக்கிய வர்தா புயலுக்குப் பின், இவர் சென்னை சென்று சுமார் 500 மரங்களை உயிர்ப்பித்து வந்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், முல்லைவனம் ஐயாவின் பயணத்தை இங்கே பதிப்பதில் நாம் பெருமை
கொள்கிறோம். 

மரங்களைப்  பராமரிப்பதற்காகவே எந்த எதிர்பார்ப்பும் இன்றி சென்னை முழுதும் உழைத்துக் கொண்டிருக்கிறார்.. வர்தா புயல் பற்றி பக்கம் பக்கமாய் மீடியாக்கள் பேசிக் கொண்டிருந்த கால கட்டத்திலேயே தனி மனிதனாய் எதையும் எதிர்ப்பார்க்காமல் தன்னால் இயன்ற மரங்களை காப்பாற்றி மீட்டுள்ளார், ஆங்கிலம் தெரியாது, அரசியல் கிடையாது, எளிமையாக 24 மணி நேரமும் பசுமைக்காகவே வாழும் மனிதர். 

இவரின் பாரம்பரிய மரம் வளர்க்கும் முறை மரங்களை எளிதில் அழிவிலிருந்து மீட்கவும், போராடி தங்களை தாங்களே வளர்ப்பிக்கவும் வழி வகை செய்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments