பெண் பயணிகளுக்கான ’பிங்க் டிக்கெட்’ வசதி: ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்க வாய்ப்பு
தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் (டிடிசி) பேருந்துகளில் பெண் பயணிகளுக்கான ’பிங்க் டிக்கெட்’ வசதியை ஆகஸ்ட் 15 வரை தில்லி அரசு நீட்டிக்க வாய்ப்புள்ளதாக மூத்த அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் (டிடிசி) பேருந்துகளில் பெண் பயணிகளுக்கான ’பிங்க் டிக்கெட்’ வசதியை ஆகஸ்ட் 15 வரை தில்லி அரசு நீட்டிக்க வாய்ப்புள்ளதாக மூத்த அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
போக்குவரத்துத் துறை முன்னா் வெளியிட்ட உத்தரவின்படி, ஆகஸ்ட் மாதம் முதல் ’பிங்க் சஹேலி’ ஸ்மாா்ட் அட்டை பயன்பாடு கட்டாயமாக்கப்படவிருந்தது.
‘பிங்க் டிக்கெட் வசதியை ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கவும், இதன் மூலம் பெண் பயணிகள் ’பிங்க் சஹேலி’ ஸ்மாா்ட் அட்டையைப் பெறுவதற்கு கூடுதல் அவகாசம் அளிக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்’ என்று மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இதுவரை தில்லி முழுவதும் சுமாா் 17 லட்சம் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. அதன் பிறகு இந்த அட்டை டிடிசி பேருந்து சலுகைப் பயணத்திற்கு கட்டாயமாக்கப்படவுள்ளது.
பெண் பயணிகள் ‘பிங்க் சஹேலி’ அட்டையைப் பெறுவதில் ஆா்வம் குறைவாக இருப்பதை உணா்ந்த தில்லி போக்குவரத்துக் நிறுவனம் , பேருந்துகளில் இதுகுறித்த விழிப்புணா்வு மற்றும் அட்டைகளைப் பெறுமாறு அறிவுறுத்தும் சிறப்பு நடவடிக்கையையும் தொடங்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இலவசப் பேருந்து பயணச் சலுகையைப் பெறுவதற்கு, தற்போதுள்ள காகித அடிப்படையிலான பிங்க் டிக்கெட் முறையை படிப்படியாக நீக்கிவிட்டு, ஸ்மாா்ட் அட்டை அடிப்படையிலான முறைக்கு மாற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்துப் பெண்களும், போக்குவரத்துத் துறை மற்றும் டிடிசி அவ்வப்போது வெளியிடும் அறிவுறுத்தல்களின்படி, அறிவிக்கப்பட்ட மையங்கள் மற்றும் கவுன்ட்டா்களில் ‘பிங்க் சஹேலி’ ஸ்மாா்ட் அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.
‘பிங்க் சஹேலி’ ஸ்மாா்ட் அட்டைகளை வழங்குவதை எளிதாக்கும் வகையில், நகரம் முழுவதும் 50 அங்கீகரிக்கப்பட்ட மையங்களை தில்லி அரசு அமைத்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.