குழந்தைகளை அடம்பிடிக்க வைத்த விஜய்: மன உளைச்சலான விசிக நிர்வாகி புகார்
குழந்தைகளை அடம்பிடிக்க வைத்து வாக்கு சேகரித்ததாக விஜய் மீது விசிக நிர்வாகி பாலகிருஷ்ணன் புகார்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் குழந்தைகளை அடம்பிடிக்க வைத்து வாக்கு சேகரித்ததாக தவெக தலைவர் விஜய் மீது விசிக நிர்வாகி பாலகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெகவுக்கு வாக்களிக்க தங்களின் பெற்றோரிடம் குழந்தைகள் அனைவரும் அடம்பிடிக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்த விஜய்க்கு, குழந்தைகள் முதல் முதியோர்கள் வரையில் ரசிகர்கள் பட்டாளம் இருந்ததால், அதனை சாதகமாக விஜய் பயன்படுத்திக் கொண்டார்.
Advertisement
இந்த நிலையில், விஜய்யின் தேர்தல் பிரசாரத்தில் கேட்டுக் கொண்டதுபோலவே, தனது குழந்தையும் தன்னை தவெகவுக்கு வாக்களிக்குமாறு அடம்பிடித்ததாக விசிக நிர்வாகியான பாலகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார்.
விஜய்யின் பேச்சைக் கேட்டு, தனது குழந்தை அடம்பிடித்ததால், தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், தனது குழந்தையும் மன உளைச்சல் மற்றும் உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டதாக விஜய் மீது கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாலகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியில் ஒரே கட்டமாக முடிவடைந்தது. தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவில் முதன்முறையாக 85 சதவிகிதத்துக்கு வாக்குகள் பதிவாகி சாதனை படைத்ததாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.