தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதி கடும் தாக்கு
முதல்வர் விஜய்யை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விமர்சித்துள்ளது குறித்து...
முதல்வர் விஜய்யை டம்மி முதல்வர் என எதிர்க்கட்சித் தலைவரும் திமுக எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, "திமுக இன்னும் 2 நாள்களில் தன்னுடைய 77-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளது. இந்த 77 ஆண்டுகளில் எத்தனையோ வெற்றிகளையும் தோல்விகளையும் திமுக பார்த்துள்ளது.
தேர்தல் வெற்றி - தோல்விகளுக்கு அப்பாற்பட்டு, மக்களுக்காக என்றுமே நிற்கும் இயக்கம்தான் திமுக. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு வருகிறோம்.
Advertisement
Advertisement
தமிழகத்தில் டம்மி ஆட்சியாளர்களால் மக்கள் ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் மின்வெட்டு. அரிசி, பருப்பின் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது.
இவற்றைப் பற்றி முதல்வரிடம் கேள்வி எழுப்பினால், அவரால் பதில்சொல்ல முடியவில்லை. பதில் சொல்ல முடியாமல், திமுக மீதும் மு.க. ஸ்டாலின் மீதும் அவதூறு பரப்பி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இந்த மாதிரியான அநாகரிகமான, இப்படியொரு டம்மி முதல்வரை நாம் பார்த்ததில்லை. வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.
பல்வேறு வாக்குறுதிகளைச் சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தனர். ஆனால், இந்த 4 மாதங்களில் ஒரு திட்டத்தைக்கூட நிறைவேற்றவில்லை.
திமுக அரசு கொண்டுவந்த திட்டங்களின் பெயர்களை மாற்றி, திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி, அவர்கள் (தவெக) கொண்டு வந்தது போன்று பொய்யாகப் பரப்புகின்றனர்.
அடுத்த கட்சி எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியமைத்த காரணத்தால்தான், இன்று இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் வருகிறது. இந்த ஆட்சியாளர்களின் வீழ்ச்சிக்கு, வருகிற இடைத்தேர்தல் ஒரு தொடக்கமாக இருக்க வேண்டும்.
இந்த இடைத்தேர்தலில் டம்மி முதல்வருக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்" என்று தெரிவித்தார்.
Power cuts everywhere in Tamil Nadu: Opposition Leader Udhayanidhi criticizes CM Vijay
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.