எங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்
பட்ஜெட் வணிகவரிகள் மற்றும் பத்திரப்பதிவுத் துறையின் கீழ் உள்ள அறிவிப்புகள் பற்றி...
திட்டமிட்டு வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பட்ஜெட் உரையில் அமைச்சர் மரியவில்சன் தெரிவித்தார்.
தவெக அரசின் 2026 -2027 ஆம் நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் மரியவில்சன் பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
அப்போது பேசுகையில் "நேர்மையான, வெளிப்படையான மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலான சரக்கு மற்றும் சேவை வரி (GST) நிர்வாகத்தை வழங்குவதில் இந்த அரசு உறுதியுடன் உள்ளது.
Advertisement
Advertisement
நேர்மையாக வரி செலுத்துவோரை மாநிலத்தின் வளர்ச்சியில் உண்மையான பங்களிப்பாளர்களாகக் கருதி, அவர்கள் வணிகம் செய்வதை மேலும் எளிதாக்கும் வகையில், வணிக வரிகள் துறை சேவை சார்ந்த தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் மற்றும் நேரில் சந்திக்கத் தேவையில்லாத (Faceless) அணுகுமுறையை நோக்கிச் செல்லும்.
அதேவேளையில், திட்டமிட்டு வரி ஏய்ப்பு செய்வோர் மீது மட்டுமே உளவுத் தகவல்கள் அடிப்படையிலான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பொது ஆவணக் காப்பகமாகப் பதிவுத் துறை ஆற்றும் முக்கியப் பணியினை கருத்திற்கொண்டு ஆவணங்களைத் தடையின்றியும், எளிமையாகவும் பதிவு மேற்கொள்வதை உறுதி செய்யும் வகையில் அரசு சிறப்பான சீர்திருத்தங்களை முன்னெடுப்பு செய்துள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக மின் - புத்தாக்கத்தை (digital innovation) முன்னிறுத்தி சொத்துப் பதிவை எளிதாகவும், ஊழலற்றதாகவும் மாற்றுவதற்கு இந்த அரசு உறுதிபூண்டுள்ளது.
நிலம் வாங்கும் பொதுமக்களை மோசடிப் பதிவுகளிலிருந்து பாதுகாப்பது அரசின் தலையாய கடமையாகும்.
இதற்கென உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் முன்னணி மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப, தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் விதிகள் இயற்றப்படும்.
மேலும், 'எங்கிருந்தும் பதிவு' இந்த அரசின் முக்கிய இலக்காக அமையும். இதன் மூலம், பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்தபடியே ஆவணங்களை பதிவு செய்ய இயலும்.
அசையா சொத்து பரிவர்த்தனைகளுக்கான சட்டப்பூர்வப் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையில் எந்தவித பாதிப்பும் இன்றி, மேம்பட்ட மின் ஆளுகை தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி. முற்றிலும் காகிதமில்லா மற்றும் நேரடி வருகையற்ற பதிவு முறை படிப்படியாக நடைமுறைப் படுத்தப்படும்.
இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் வணிக வரிகள் துறைக்கு 651கோடி ரூபாய் மற்றும் முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவுத் துறைக்கு 475 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
TN budget 2026: Property registration from anywhere is the government goal
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.