தமிழ்நாடு பட்ஜெட் 2026: காவிரி, வைகை, தாமிரவருணியில் நதிச் சுற்றுலா!
காவிரி, வைகை, தாமிரவருணியில் நதிகளில் நதிச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 53 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு...
காவிரி, வைகை, தாமிரவருணியில் நதிகளில் நதிச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 53 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெக அரசின் 2026 -2027 ஆம் நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட் இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் மரியவில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
அப்போது காவிரி, வைகை, தாமிரவருணி நதிகள் மீட்பு குறித்து பேசிய அவர்,
Advertisement
Advertisement
"நமது வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் தொலைநோக்குப் பார்வையின் கீழ், மாமல்லபுரத்தை ஒரு சர்வதேச சுற்றுலாத் தலமாக அரசு முழுமையாக மேம்படுத்தும். இத்திட்டத்தைச் செயல்படுத்த, (destination development) மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 200 கோடி ரூபாய் மானியம் பெறுவதற்காக, மத்திய அரசுக்கு விரிவான திட்டம் சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த உத்திசார்ந்த முதலீடு உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா வசதிகளை மேம்படுத்தி, போக்குவரத்து வசதிகளை அதிகரித்து, உலகச் சுற்றுலா வரைபடத்தில் தமிழ்நாட்டின் இடத்தை வலுப்படுத்தும்.
தமிழ்நாட்டில் நதிச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், மாநிலத்தின் மூன்று முக்கிய நதிகளில் நதிச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 53 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இது, காவிரி நதியில் ஒகேனக்கல் முதல் திருவரங்கம் வரையிலும், வைகை நதியில் மதுரையிலும் மற்றும் தாமிரபரணி நதியில் பாபநாசம் முதல் திருநெல்வேலி வரையிலும் அமைக்கப்படும்.
மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் உணவு மற்றும் கலைப் பண்பாட்டை பிரபலப்படுத்தும் நோக்கில், மாநிலத்தின் உணவுச் சுற்றுலா வழித்தடங்களை வெளிக்கொணரும் திட்டத்தை உணவு மற்றும் கலைத் திருவிழாவாக இந்த அரசு 20 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்தும்.
காவிரி, வைகை, தாமிரவருணி நதிகள் மீட்பு
தமிழ்நாட்டின் உயிர்நாடிகளாகத் திகழும் காவிரி, வைகை மற்றும் தாமிரபரணி போன்ற பெருநதிகளில், சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் வீட்டுக் கழிவுநீர் நேரடியாக கலப்பதாலும், நதிக் கரைகளில் திடக்கழிவுகள் கொட்டப்படுவதாலும், அவை தொடர்ந்து மாசடைந்து வருகின்றன.
குறிப்பாக, இந்நதிகள் தொழில்மயமான மற்றும் நகரமயமான பகுதிகள் வழியாகச் செல்லும்போது, இந்நதிகளின் சில பகுதிகள் கடுமையான மாசுபாட்டிற்கு உள்ளாகின்றன. நமது நதிகளின் தூய்மையை மீட்டெடுப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு ஆய்வினை மேற்கொண்டு, விரிவான திட்ட அறிக்கையை இந்த அரசு தயாரிக்கும். இத்திட்டத்தில், திரவக் கழிவுகளைக் கையாள்வதற்காக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், கசடு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் ஆகியவை உள்ளடங்கியிருக்கும்.
மேலும், இந்நதிகளின் கரைகளை ஒட்டியுள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புரப் பகுதிகளில் முழுமையான திடக்கழிவு மேலாண்மையையும், நகர்ப்புரங்களில் நதிக்கரை மேம்பாட்டையும், நதி மேற்பரப்புச் சுத்தம் செய்தலையும், இத்திட்டம் உறுதிசெய்வதாக அமையும்.
இத்திட்டத்திற்கான ஆரம்பகட்ட ஆய்வு மற்றும் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்வதற்காக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Budget 2026: River tourism on the Cauvery, Vaigai, and Thamirabarani
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.